Sunday, June 17, 2012

வீழ்ந்து மீளும் வார்த்தைகளின் வன்மக்கீற்றுகள்



சிரித்திருக்கும் என்னையும் என் பொறுமையையும்
முழுதாய் விழுங்க விழிகள் சிவந்து காத்திருக்கும்
வன்மத்தின் வீரிய வார்த்தைகளை
சுற்றமற்ற சுவர்களை நோக்கிச் சிதறடிக்கிறேன்..

சிதறிப் போகும் ஒவ்வொரு வார்த்தையும்
பயணிக்கும் தொலைவை மறந்து
வேகச்சிறகுகளைக் கொண்டு வெட்டி வீழ்த்துகின்றன
முன்நிற்கும் சுவர்களின் ஏதும் விளங்கா குறுநகைப்பை..

ஆசுவாசமாகியிருந்த தருணம்
என்னை நோக்கி விதியின் கூரிய வாட்களை ஏவிடத்
துவங்கியிருந்தன சுவர்களின் கீறல்களும்
வெளிறிப் போன வீக்கங்களும்...

உடலெங்கும் சிவக்கத் துவங்கிய
சில நொடிகளில் வெளியேறத் தவிக்கின்றன,
என்னுளிருந்து என்னை மீறிய
மேலும் ஓரிரு வார்த்தை துணுக்குகள்..

- தேனு


நன்றி உயிரோசை 

No comments:

Post a Comment