Sunday, April 28, 2013

தப்பி விட்ட தருணம் ஒன்றின் கனம்


Photo Courtesy: Karthik Alagesan

மஞ்சள் நிற மழையை
சிக்கனமின்றி கக்கிக் கொண்டிருந்தது
ஒரு மின்கம்பவிளக்கு..
கம்பத்தை ஒட்டி ஒருபுறம்
மூன்றடுக்கு மாடி குடியிருப்பு,
மறுபுறம் வைக்கோலும் சாணமும் நிறைந்த
மண் மேடு..
அடுக்கு மாடியின் முதல் தள வீட்டின்
சாளரத்தின் வழி
மேட்டில் இரு பசுக்கள் கட்டி இருப்பதை
நிதமும் காணலாம்.
ஒன்று மட்டும் பல மாதங்களாய்
இரவு முழுதும் ஓயாமல்
கத்திக் கொண்டிருக்கும்,
சத்தம் தவறாத நாளுமில்லை, 
சுற்றத்தில் திட்டாத மனிதரும் இல்லை..
ஓர் பின்னிரவின் இடையில்
சத்தம் நின்ற தருணத்தில்
உறக்கம் தொலைத்த விழிகள்
அதன் பிறகான இரவில் அடங்க மறுத்தன..
மறுநாள் வெளிக் கிளம்பி
மேட்டிற்குக் கண்களை ஓட விட, 
ஒரு மூலையில் கோணிப்பை
ஆளுயர எடையை மறைத்து இருந்தது,
கனத்த மௌனத்துடன்
கடந்தேன் சற்று தொலைவை..
சில நிமிடங்களில்
மனமெங்கும் ஒலித்துக்  கொண்டிருந்தது
அம்மா என்ற சத்தம் மட்டும்
மீண்டும் மீண்டும்..

 - தேனு

நன்றி கீற்று,

Monday, April 8, 2013

பிரியத்தின் யதார்த்தமும் எதிர்பார்ப்பும்

Photo Courtesy: Karthik Alagesan

மழைச்சாரல் துவங்கிய நாளொன்றில்
நெஞ்சோடு அணைத்து வந்திருந்தாள் யாழினி,
பெயரும் சூட்டியாகிவிட்டதென
இறுமாப்பாய் சிரித்து
இதழ் குவித்து கலைநேசன் என்றாள்.
அன்றிலிருந்து வீட்டில் ஒருவனாய்
வளரத் துவங்கினான்,
இணை பிரியா தோழர்களாகிப்
போயினர் இருவரும்..
முகத்தோடு முகம் வைத்து
புரிதலாய் அவள் மொழியில்
கொஞ்சிக் கொண்டே இருப்பாள்,
உணவு வேளைகளில் எல்லாம்
அவனுக்கும் வைத்துத்
தானும் அருகமர்ந்து உட்கொள்வாள்.
அவன் குளிப்பதற்காகத் தனியாய்
ஒரு தொட்டி வாங்கி
தினம் இரு மணி நேரம் குளிக்க வைத்துச்
சிரிக்க யாழினிக்கு மட்டுமே வந்தது..
கட்டிக் கொண்டே தூங்குவதும்
அவர்கட்கு வழக்கமாகிப் போனது..
இயந்திரமாய் கல்வி ஏற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பும் வந்தது,
பிரியா விடை கொடுத்து
அழுதழுது அவனுக்கு முத்தம் முத்தமாய் கொடுத்து
விடுதிக்குச் சென்று விட்டாள் யாழினி..
இரு நாட்களாய் இம்மியும் நகராமல்
வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறான்
கலைநேசன்..

 - தேனு

நன்றி நவீன விருட்சம்,

Saturday, April 6, 2013

பிரிவின் வண்ணம் பூசும் ஒரு சித்திரச்சுவர்


ஒரு வருத்தத்தின் சாயலைப் பூசிக்கொண்ட
என்னறையின் சுவர்களில்
நாங்கள் நானாக மாறியதோர்
பிரிவின் கதையை வரையத் தெரியவில்லை,
வளையத் தெரியவுமில்லை எனக்கு..
தனிமையின் விரல் கோர்த்து
தத்தி தத்தி நடை பயில்கிறேன்,
வண்ணச்சுவர்களை அடையும் ஒரு நூலிழையில்
தனிமையின் விரல்விடுத்து
மௌனத்தின் விரல் தேடி நிற்கிறேன்..
வட்டத்தின் ஒரு புள்ளிக்குள்
சொல்ல மறுத்த மறதியின்
விழுக்காட்டில் மொத்தமாய் தொக்கியபடி
என்னை வரைந்து கொண்டிருக்கிறது
பிரிவின் நிறத்தில் குழைத்தெடுத்த தூரிகை..
தேனு
- நன்றி கீற்று,