Thursday, March 14, 2013

காற்றில் அசைந்தாடும் இசைசிறகுகள்




குளிரூட்டும் காற்று வேகத்தில்
மிதந்து தாளமிடுகின்றன
சாளரக் கதவுகள்..

தெருவோர நாய்குட்டியின் அருகில்
சன்னமான மண்தரையில் தன்னந்தனியாய்
உருள்கிறது காற்றை குடிக்கும்
ஒரு புல்லாங்குழல்..

வாய் திறந்திருக்கும் ஊதுதுளை நுனியில்
உட்புகும் கோட்டோவியங்கள்
வண்ண வண்ண இசைக்குறியீடுகளென
வெளியாகி விண்ணுக்கு சிறகடிக்கின்றன..

குளிர்ந்தாடும் இரவின் மேனியில் மெள்ள பயணமாகி 
இசைச் சிறகுகளுடன் வட்டமிட்டு
மின்னலென வெளிவருகிறாய்..

உன் அடர்மௌனத்தின் நீளத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில்லுடுகின்றன
இன்னமும் இசைக்கப்பெறாத மெட்டுப்பூச்சிகள்..

 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6158