Saturday, January 5, 2013

நாகதாளி பூமணம்



பெருமணல் வீசும் காற்றில்
பாலைத்தீ அமிழ்த்திய பெயரால் விரிகிறது
நாகதாளி வனக்கூடு..
வனவெதுப்பினும் மிஞ்சி
உயிர்த்தெழுந்த கோடுகளாய்,
கிளையிடத் துவங்கும் முறையே
மீள்கணம் நீள்வதைக் குறிப்பெடுக்க
என்றுதான் இயல்கிறது?
வெளியோடு உழன்றாடும்
சிற்றிலை ஊன்றி
மெல்ல மெல்ல வார்த்து
வண்ணமாய் நிறைகிறது
நிறம்சூடுகனி..
மணலோடும் காற்றோடும் கிளர்ந்து
வெளிக்கொணர்ந்த நிறங்களில்
உச்சிமீது வானிடியும்
காலநேரங்கள் நிழல்
துளியும் இருக்கிறதில்லை..
நிறம் மாறிய நெருப்புக்கனியின் நுனியில்
பூவாளியின் துளைகளாய் இன்னமும்
தூவிக் கொண்டிருக்கிறது முள்மழை..
- தேனு
நன்றி சொல்வனம்,
http://solvanam.com/?p=23071