Friday, January 9, 2015

கனவுகளின் கிழிந்த ஒற்றை சிறகு



Photo Courtesy - Ashok Saravanan

*
இரவின் நீட்டலில் ஒரு வன்புன்னகையுடன்
குவிந்த அவ்வீட்டிற்குள் நுழைகிறான்,
கனவுகளை முட்கள் கொண்டு கிழிப்பவன்..
ஒவ்வொரு கனவுக்குள்ளும் மிக எளிதாக நுழைந்து
செந்நிற சிறகுகளாலான நகங்களை
கனவின் நடுக்கம் கொண்டு கூராக்குகிறான்..
மென்மையான பூவிதழ்களைப் பிய்த்தெடுத்து
போர்த்திக் கொள்ளும் வாகு
அவனுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்..
வண்ணங்களைக் கீறி சதை உதறும்
முத்தங்களைச் சூறையாடுதல்
அவனுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்..
வீட்டின் காற்று புகமுடியா அறையில்
வெளிர்கூந்தலை விரித்து
சிக்காக்கிக் கொண்டிருக்கிறாள் நிலவதனி..
அவளைக் கண்டதும் தன்னிலை விளக்கிச்
சிறகுகள் அடர்ந்த கனவின் வனத்தில்
அவளுடன் சுற்றித் திரிய துவங்குகிறான்..
வன்மத்தின் ஆதி வினா கனவுகளா? உறக்கங்களா? என
குளிர் மரங்களின் கிளைகளில்
அமர்ந்து குரூர புன்னகை இழைந்தோட
விவாதிக்கிறார்கள்..
வருடங்களில் வயதுகள் குறைந்து
விவாதத்தின் இரட்டை நாக்கைப் பற்றி
காலம் தாண்டி பயணிக்கிறார்கள்..
காலங்கள் கடந்து வனத்தின்
எல்லைகளைக் கடந்ததும்,
பற்கள் பதித்து கிழித்தெறியும் வெறியுடன்
சிதறுண்டு தள்ளாடும் அவனுள் விடம் ஏற்றி
நகைத்து நிற்கிறாள் நிலவதனி..

 - தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27659-2015-01-08-06-33-01

பயணிக்கும் காற்புள்ளிகளின் உருவமற்ற கூட்டுச்சொல்


Photo Courtesy - Ashok Saravanan

*
இருளில் நீளும் மின்வரியின் இறுதியில் விழுந்து சொல்லாகிறது
ஒரு காற்புள்ளி..

சொற்கள் அர்த்தமற்றுப் போகும் என்றபடி
வீசும் கோர்வையின் விரல் பிடித்து நடக்கிறது,
உருவத்தின் நிலையை மறந்தபடியும்,
உருவத்தின் தேவையை மறுத்தபடியும்..

துகள்களின் கூட்டு எண்ணிக்கை
மீண்டும் தூணாகாது என்பதில் துவங்குகின்றன,
பிரசுரிக்கச் சேர்த்து வைத்திருந்து
சொற்களாய் உருமாறி கொண்டிருக்கும் காற்புள்ளிகளிலிருந்து
வெடித்து நீர்க்கும் அர்த்தங்கள்...

அர்த்தங்களின் இடைவெளி ஒன்றி அச்சில் வார்க்கும்
ஓர் நீண்ட சொல் உருவாவதை
மெலிதாய் கூட சொல்வதற்கான தேவை இருப்பில் இல்லை..

உருவான சொல்லின் முற்று நிலைக்குத் தேவையென,
காற்று விடுத்துப் போகும் ஒற்றை முற்றுப்புள்ளியை நோக்கி ஓடுகிறது விழ மறந்த சொல்லீர்ப்பு..

- தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27629-2015-01-05-06-49-55

சின்ட்ரெல்லாவின் ஒற்றை தவறது எதிர்விசை

**
மூன்று இறப்பைக் கடந்து
விழித்திருக்கிறாள் சின்ட்ரெல்லா..
உயிர்சிறகுகளுடன் கந்தர்வ வனத்தை
அடைய தவமிருக்கும் அவள்,
கந்தர்வ அரங்கு தயாராகிறதை அறிந்து
சிறகுகளற்ற தன்னிலையில் விம்மிச் சரிகிறாள்..
கண்ணீரின் விளிம்பில் பிறக்கும் மாய யட்சி
சூதாடத் துவங்கியதும்,
யட்சிக்கும் சின்ட்ரெல்லாவிற்கும் மத்தியில்
உணர்சிறகுகளுக்கு இன்பக்கனவுகளென ஒற்றை தவறுக்கான
உத்திரவாதம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது..
வண்ணச் சிறகுகள் கொண்டு அரங்கை அடைகிறாள்
சின்ட்ரெல்லா,
எதிர்ப்படும் கந்தர்வனை இறுகப் பற்றிக் கொள்கிறாள்..
ஆடிக் களைத்து இதழ் தேடி
முத்தச்சிறகைப் பதிக்க,
இதழில் ஒரு வித பரிச்சய மணத்தை
உணர்கிறாள் உள்ளெங்கும்..
வெளியேறும் நோக்கில் பரிச்சய நொடிகள் கரைந்து விடுகின்றன..
மறுநாள் மீண்டும் செல்கிறாள்..
கலந்தாடுகிறாள்..
இதழ் தீண்டுகிறாள்..
உயிர் உணர்கிறாள்..
கந்தர்வனின் குருதி தோய்ந்த விழிகளும் குரூரச் சிரிப்பும்
வரவேற்க நிலையற்று நிற்கிறாள்..
மறுநிமிடம் மூச்சின் இறுதி வளைவை இறுகப் பற்றி கொண்டு ஓடுகிறாள்..
விடுத்து வந்த அரணத்தின் நினைவால்
அறையின் ஒரு மூலையில் அமர்ந்து
காலை அறுத்துக் கொண்டிருக்கிறாள் சின்ட்ரெல்லா..

 - தேனு

நினைவுகளின் கூர்மையில் பகிராது நீர்த்த வன்மம்


Photo Courtesy - Karthik Alagesan

*
இரவின் நீட்டலில் பகிரமுடியாது கசக்கிய கைக்குட்டை
எங்கோ நினைவுகூறுகளின் குவியலில் மறைந்திருக்கிறது!

பதியும் வார்த்தைகள் பதிந்தபடியே கரைகின்றன,
தெளியும் நிமிடங்கள் வெகுவாய் சாய்த்துப் பார்க்கும்
ஒரு பழுத்த இலையென சரசரத்துத் தேய்கிறேன்,
ஒரு ஆளுயுர அரவத்தின் இறுதியில்....

சுளீரென்ற சத்தம் விடுத்து 
சுற்றமனைத்தும் விக்கித்து நிற்கின்றன,
அணைந்தது காற்றா நெருப்பா?
நனைந்தது நீயா நானா? 
நீயெனில் பறக்கவும் , நானெனில் விலகவும்
செயல்பட துவங்க வேண்டும்!

ஒரு தணிந்த இரவு தேவை படுகிறது
செயல்படவும் மீண்டும் உயிர்க்கவும்,
இதே வளராத சுழலின் ஒற்றைப் புள்ளியில்
முடிவுகளற்று நிற்க மட்டுமே
கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்றளவும்..

நினைவுகளின் துவைக்காத கைக்குட்டை இன்னும்
கசக்கியபடி உள்ளேயே மறைந்திருக்கிறது,
அதனூடே மிஞ்சி இருந்த நீர்த்த வன்மமும்!!

 - தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27609-2014-12-31-00-51-07

நிலவதனியின் நான்காம் உலர்முத்தம்


இருண்டு விழும் கால அறைக்குள்
இரவின் ஒவ்வொரு அடுக்காய் களைந்து
முத்தப்பிரதிகளை உயிர்வாயுவின் தீண்டலால்
சேகரிக்கிறாள் நிலவதனி..
அவளின் போதையுற்றவன் மெல்ல
தன்னிலை இழக்கும் தருணத்துள்
முத்தங்களை அவிழ்ப்பதில் அவளிடம் என்றுமே ஓர் துல்லியம்.
அவனுக்குள் கனவுகள் அரங்கேறும் நொடியில்
உடலெங்கும் கீறல்களால் நிரம்பி வழிய விடுகிறது
அவளின் முதல் முத்தம்.
ரோமங்கள் பற்றி எரிந்து
சாம்பல் சில்லுகளாய் சிதறுகின்றன..
நினைவுகளின் கூடங்களை ஆட்டுவிக்க
உச்சி முதல் பாதம் வரை ஊடுருவி 
இரண்டாம் முத்தம்
தன்னிலையை நிரூபித்து விட்டு நகர்கிறது உயிர்வழி..
மூளையின் ஓரிடத்தில் வலியின் தெறிப்பு,
திண்ணமாய் நிலைக்க தவறும்
நினைவின் கால்கள் தத்தளிக்கின்றன..
உயிரைக்  குழைத்து வீறிடும்
மூன்றாம் முத்தம்
உணரணுக்களை தின்று விடும் சப்தம்
இரை தேடிச் சிறகடிக்கும் பருந்துகளின் அலறலாய்
மிக சன்னமாய் கேட்கும் அறையின் மூலைகளில்..
நான்காம் முத்தத்தின் இறுதியில்
உலர்ந்து விழும் உடலை எரித்து முடிந்தபின்
நகங்களையும் இதழ்களையும்
கூராக்க யத்தனிக்கிறாள் நிலவதனி
நாளைக்கான நான்கு முத்தங்களுக்கு..

 - தேனு

வண்ணச்சிறகுகளாலான கோட்டோவியம்


Photo Courtesy - Karthik Alagesan
*
ஒரு இளம்பெண்ணின் கோட்டோவிய கீழ்நுனியின்
வண்ணமற்ற இழையைப் பிடித்தபடி
மையம் நோக்கி நடக்கத் துவங்குகிறாள் யாழினி..
விழிகளின் வெளிச்சத்தை மெலிதாய் பரப்பி 
நீள்கோடுகளைக் கடைந்தெடுத்து
சொற்களாய் உருக்குகிறாள்.
மேடுகளைச் செதுக்கி அலையலையாய்
முன்னேறும் வேகம் என்றுமே
அவளுக்கு அலாதியானது..
ஒவ்வொரு வளைவிற்குத் தன் சொல்லொன்றையும்,
ஒவ்வொரு முடிச்சிற்குத் தன் புன்னகையொன்றையும்
சிறகடிக்க விடுத்து நகர்கிறாள்.
சொற்களையும் புன்னகைகளையும்
ஒரு சேர கலந்து வெளியிட்டு
வண்ணம் அமைக்க அவளால் மட்டுமே முடிகிறது.
மையம் அடைந்தவள் மெலிதான மௌனமொன்றை
வெளியிட்டபடி சிறகுகளை உள்ளடக்கிச்
சாயவும்,
வண்ணம் பூக்கத் துவங்குகிறது அவளைச் சுற்றி..
காலங்கள் கடந்து வண்ணத்து உயிர் சிற்பமாய்
உருமாறி இருந்தது கோட்டோவியம்,
அருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள்
வண்ணச்சிறகுகளின் இளவரசி யாழினி..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/26702-2014-06-16-05-51-49

நன்றி நவீனவிருட்சம்,
http://www.navinavirutcham.in/2014/07/blog-post_12.html

கைகளில் பிசுபிசுக்கும் இனிப்பின் நிறம்

*

இனிப்பு வாங்கி உள்நுழையும் எதிர்பார்ப்பை
உடைக்க ஓரிரு சொற்களையோ கற்களையோ
என்னுள் எப்பொழுதுமே தேக்கி வைத்திருக்கிறாய்..

போதும் என்ற சொல் பந்து
மீண்டும் மீண்டும் சுவர்களில் விழுந்து தெறிக்கிறது,
படியும் காவி நிற வட்டங்கள்
அச்சொல்லின் கூட்டு எண்ணிக்கையென
பறைசாற்றிக் கொள்ள..

ஒவ்வொரு சொல்லாய்
ஒவ்வொரு சொல்லடுக்காய்
மென்மேலும் பரவி மெல்லியதொரு அறையென உருவாகும்
சொல்வன்மம் உச்சத்தை உணர மட்டும் இல்லை..

ஒரு வனத்தின் அடர்த்தியைக் கொண்ட
சொல்லறையின் கதவுகள்
யாருக்கெனவும் திறவாது என்றபடி
சொற்களைத் தின்ன துவங்குகிறது அகலவாய் கொண்ட இனிப்பு..

கதவிடுக்கு திறவும் தருணத்தில்,
தேக்கி வைத்த சொற்களையும் உண்டபடி
கை நிறைய படிந்திருக்கிறது
இனிப்பின் பிசுபிசுப்பு நிறம் மட்டும்..
*

 - தேனு

நன்றி நவீன விருட்சம்,
http://www.navinavirutcham.in/2014/06/blog-post.html

நன்றி சொல்வனம்,
http://solvanam.com/?p=33731