Wednesday, May 22, 2013

வனப்பூவிதழ் சுவையின் திடம்


Photo Courtesy: Madhu


அப்பிக்கொள்ளும் இருளில்
சுற்றிப் பறக்கும் மின்மினியின் பாதையை
உள்வாங்கியபடி நிற்கிறாள் யாழினி..
வட்டங்களாகவும் நீள்கோடுகளாகவும்
ஓர் உரையாடலை மின்மினி வரைய
படித்துத் தொடரத் துவங்குகிறாள்..
நெடுந்தூர வனத்தின் மையத்தில்
ஒரு செண்பகப்பூ விரிகிறது.
பூவின் இதழில் மெல்ல தேன்சிட்டுகள்
ஒவ்வொன்றாய் பிறக்கத் துவங்குகின்றன.
நீண்டிருக்கும் சிட்டுகளின் அலகுகள்
நிறம் மாறிக் கொண்டே இருக்கின்றன.
கருநீலம், செம்பவளம்,
இளம்பச்சை, வெளிர்சாம்பல்
என இறுதியில் பூவின் நிறத்தையே  தாமும்
அடைகின்றன.
தேன்சிட்டு ராணி மெல்ல சென்பகப்பூவிற்குள்
பூநிற அலகைக் கொண்டு நுழைகிறாள்,
தித்திப்பு குறைவதாய் உணர்ந்து
மெல்ல பூவின் வெளி நோக்கித்
திரும்பிப் பறக்கிறாள்
தொலைவை மறந்து..
தித்திப்பின் முகவரி தான் மட்டும் அறிவேனென
உறக்க நினைவில் சிரிக்கும்
யாழினியைப் பின்தொடரத் துவங்குகிறது
மின்மினி...

 - தேனு

நன்றி கீற்று,

Tuesday, May 14, 2013

இராப்பேய்க்கதைகளின் இளவரசி



Photo Courtesy - Madhu
அதனை மட்டும் சொல்லாதீர்கள்!
அடரிருள் வீட்டின் ஒரு மூலைப் பகுதியில்
வெண்ணிற சேலையணிந்து
மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறாள்
நிலவதனி..
கொலுசுமல்லாது வளையுமல்லாது
சுவாசச்சத்தம் மட்டும் முழுதாய் நிறைத்திருக்கிறது
இந்த இரவின் நிமிடங்களை...
தாழம்பூ மணக்க ஒவ்வொரு அடியிலும்
கூந்தல் தவழும் இடையில்
செருகி வைத்திருக்கும் சிரிப்புகளை
திடீரென வெளியிடுகிறாள்..
எதிரொலியின் வீரியத்தில் சிரிப்புத்துகள்கள்
சிதறி அச்சமெனும் சிறகுகளணிந்து
படபடத்துப் பறக்கின்றன அறை முழுதும்...
அவள் நடை என்றோ இறந்த உங்கள்
தோழியோருத்தியையோ
உறவினளையோ
நினைவூட்டக்கூடும்...
உங்களை நினைவுலகில் மிதக்கவிட்டு,
முகத்தினை மட்டும் மறைத்தே வைத்திருக்கும்
நிலவதனியைப் பேயென்று சொல்வதுண்டு
சிலர்..
இப்படியான நிலவதனிக்கு
இராப்பேய்கதைகள் எப்படியிருக்கும்?
அதை மட்டும் எவரிடத்தும்
உரக்கச் சொல்லாதீர்கள்!!
- தேனு

நன்றி கீற்று,