Thursday, December 27, 2012

குளத்துப் பூனையும் காலப் பறவையும்





வெண்ணிலா இல்லாத ஓரிரவில்
என்னை வந்தடைகிறது சாம்பல் நிறப் பூனை...
காலங்களூடே பயணிக்கும்
மந்திரக் குளத்தைக் காண்பிக்கிறேன்,
என்னோடு வா என்கிறது..
வெகுநாட்களான பயணத்திற்குப் பிறகு
நானும் பூனையும்
வெண்ணிற குளத்தைக் கண்டறிகிறோம்..
ஒவ்வொரு நாளும் இரவில்
பூனை மட்டும் குளத்திற்குள் செல்கிறது.
மறுநாள் நிறம் மாறி
செந்நிறப் பறவையுடன் கழித்த காலங்களை
தன் ரோமங்களின் நிறங்களில் கதைக்கிறது.
எதிர்காலத்தின் நிகழ்வுகளைக்
காண்பிக்கும் பறவையைக் காணும்
நொடிகளை எதிர்பார்க்கத் துவங்குகிறேன்.
பூனை உறங்கிய நாளொன்றில்
பறவையைத் தேடி குளத்திற்குள் சென்று
காலச்சுழலில் சிக்கிக் கொள்கிறேன்...
வற்றிய குளத்தின் கரையில்
பெருத்த வயிறுடன் அமர்ந்திருக்கிறது
தன்னந்தனியாய்
சாம்பல் நிறப் பூனை...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6134

Saturday, December 22, 2012

பூவண்ண மழையின் ஓர் இதழ்





சாரல் தீண்டும் மௌனஇரவின்
மழைத்துளி ஒவ்வொன்றையும் விரல்களில் ஏந்தி
தன்னுயிர் சுவாசத்தால்
வண்ணத்துப்பூச்சியென மாற்றி
நட்சத்திரப் பூவனத்தில்
விடுத்துக் கொண்டிருந்தாள் யாழினி..

சிறகடித்துப் பறக்கும் ஒவ்வோர் துளிக்கும்
ஒரு வண்ணக்கவிதை கணக்கென
வண்ணத்துப்பூச்சி உடலெங்கும்
தன் கன்னங்களின் நிறம் குழைத்து
வரைந்து கொண்டிருந்தாள்..

அவளை வண்ண வண்ணமாய் ரசித்துக்
கண்சிமிட்டியபடி சிலிர்த்திட்டு பறந்திருந்தது
பூவண்ண மழையிரவு...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5271

Monday, December 17, 2012

உலர்த்தப்படும் பழுப்புகளின் நிறம்


ஒரு வகையான உரையாடலுக்குப் பிறகு
உடைகள் முழுதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நிரம்பியிருகின்றன,
பழுப்பு நிற திட்டுகள்..

காலநீர்மை உடைகளின் மையத்தில் 
ஒரு அன்பின் இயற்பியலையோ 
ஒரு இறுக்கத்தின்  வேதியலையோ
வலிந்தளிக்கும் பட்சத்தில்
திட்டுகள் இலகுவாய்
நிறம் மாறத் துவங்கியிருந்தன..

சொற்களின் உணர்வு வீரியத்தில்
பழுப்புகளை இழுத்துப் பிழிந்து
யதார்த்தக்கம்பங்களின்
ஒரு பிடிக்கும்
மறு பிடிக்குமான
தொலைவில் பிழியப்பட்டு உலர்கின்றன..

உலர்த்திய உடையின் நுனிகளில்
சொட்டு சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது
நிறமற்று வெறுப்பு நீர்..

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6123

Tuesday, December 11, 2012

நிலவதனி என்றொரு அரசி






உடலெங்கும் உயிர்ப்புகளை
செருகிக் கொண்டு நடக்கிறாள் நிலவதனி,
அவளது விழிகளின் ஓரத்தில் அமர்ந்திருக்கும்
மின்மினிகள் அரவமற்று சிரிக்க,
காற்றலைகளின் போக்கில்
ஒரு செவ்வண்ண வனத்தை
அடைகிறாள்..
வனத்தைக் கிழித்து பாயும் நிறமற்ற நதியை
ஒரு மீன்குடுவையில் நிரப்பி
திருப்தியுடன் திரும்புமவள்
வழியில் ஈர்க்கும் விட்டில்களையும்
ரீங்காரமிடும் சில்வண்டுகளையும் அணைத்து
வேகமாகத் தன் வனத்தை அடைந்து மரிக்கிறாள்.
மரித்தவள் கைகளில் இருந்து
மெல்ல குடுவை நழுவி
நதி உருளகரைகளில்
மெள்ள மெள்ள
நிலவதனி மலர்கள் பூக்கத் துவங்குகின்றன..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6123

Thursday, December 6, 2012

இனிக்கும் விரல்களின் சுவை



நகங்களின் விளிம்பில்
உயிர்க்கும் நீர்வண்ணங்களையும்,
உள்ளங்கையின் மையத்தில்
வான்நிறைக்கும் மீள்சிறகுகளையும்
கைவீசி கைவீசி பறக்கவிட்டு,
முகம் முழுக்க பிசுபிசுத்தபடி
இனிப்பு நிலா
மீண்டும் வேண்டுமென்கிறாள்
விரல்கள் முழுதும்
ஏக்கவண்ணங்களுடன் யாழினி...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6110

Monday, December 3, 2012

வெளியாகும் விடத்தின் ஒரு துளி




விடத்தினை ஒத்திருக்கும் பானத்தின் ஒரு துளி
நீண்டதொரு சுவாசக் கோப்பையில்
மெள்ள பயணிக்கிறது..
.
பயணத்தின் ஒவ்வொரு அடியிலும்
உயிர்ப்பின் மீள்சிறகுகளை
யதார்த்தமாய் பொசுக்கிக் கொண்டு
வெறுப்பின் உமிழ்நீரால்
இலகுவாய் வாசல் திறந்து கீழிறங்குகிறது...
.
வேதிவினை விளைவுகளால்
மாற்றத்தை உருவாக்கி
வீழ்அணுக்களை உயிர்ப்பிக்க எண்ணி
ஏமாற்றநீர்மையில் நழுவுகின்றன
துளிரன்பின் தீத்துகள்கள்..
.
உயிர்ப்பின் மையத்துளியை
நோக்கிப் பயணித்த
வார்த்தைபாணத்தின் விடத்தால்
மெள்ள மெள்ள 
நிறைகிறது சுவாசப்பை...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6110

Sunday, November 25, 2012

தன்னிலை மறந்த பொம்மையின் பயணம்


ஒவ்வொரு உலகமாகச் சென்று
தனக்கான மௌனக்கதையைச்
சொல்லிச் செல்கிறது பொம்மை..
.
முதல் உலகில் குழந்தை ஒன்று
நகைத்தபடி
பொம்மையை அணைத்து ரசிக்கிறது..
.
இரண்டாமதில் இருவண்ண பட்டாம்பூச்சிகளை
விழிமுழுதும் நிறைத்த சிறுமி
பொம்மையிடம் சிறகுகளைக்
கதைத்து பறக்கிறாள்...
.
மூன்றாமதில் கைப்புத்தகங்களை
அறைமுழுதும் நிரப்பிய பெண்
ரகசியங்களை
பொம்மையிடம் அரங்கேற்றுகிறாள்..
.
நான்காம் உலகில் வசித்துவந்த
உதிரம் சுவைக்கும் கழுகிடம்
சிலாகித்துத் நிகழுலகிற்கு
உணர்வற்றுத் திரும்பும்
கைகால் முறிபட்ட பொம்மை,
ஐந்தாம் உலகின் சுவர்களில்
வண்ணங்கள் இழந்து கிழிக்கப்பட்ட
ஒரு புகைப்படத்தில் சென்று
அமர்ந்து கொள்கிறது...

- தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5918

மெள்ள மீள்வடிவம் பெறும் மௌனம்

கனவுகளின் நீர்மம் கெட்டிபடத் துவங்கும் நிகழ்வுகளில்
வண்ணமற்றச் சிறகுகளுடன் 
சில எழுத்துக்கள்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன..
.
மௌனமென்ற ஒற்றை இடத்தைப்
பூரணமாக்கும் எந்தவொரு எழுத்தையும்
இக்கணம் வரைக் கண்டதாய்
துளியும் நினைவில்லை..

ஒரு முறை வீழ்ந்தால் மறுமுறை என்ற
முயற்சி திருவினையாதலும்
தோற்றுப் போகிறது
வெற்றிரவின் ஓர் ஓரத்தில் வீழும் இச்சிறகுகளுக்கு...

வீரியத்துடன் வெளிவரும் புன்னகையில்
புறந்தள்ளுதல்
அவ்வளவு எளிதாயில்லை
என்கிறது வள்ளுவன் எழுதிச் சென்ற இன்சொல்..

ஈடிணையற்ற மௌனத்தை
நொசிவிழைக்கயிறால் தொடுக்க முயல்கின்ற
எழுத்துக்கள்
ஒரு மெல்லிய ஒளியின் விளிம்பில்
துவண்டு நிற்க,
வண்ணங்களற்ற சிறகுகளை
கனவுகளின் நீர்மத்தைத் துடைத்தெடுத்து
நீர்வண்ண இறகுகளால்
மெள்ள நிறைகிறது எழுத்துக்களாலான சிறகுவனம்..


 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5918

Saturday, November 3, 2012

தீரா வண்ணத்தில் ஒரு மலரின் உருவம்


chess-homepage
சுளீர் சுளீர் என இரைந்து கொண்டிருந்த
அறையின் மையத்தைச்
சுற்றிலும் நீண்டிருந்த கட்டங்கள்…
அழகானதொரு விளித்தலில்
பூதாகரமாய் துவங்குகிறது
களமறியாதோர் ஆட்டம்…
நகர்தலென்பது ஒரு அடியே எனினும்
தன்னைச் சுற்றிலும்
அரணமைத்துக் காத்திருக்கும்
உருவ பொம்மைகளின் வீழ்ச்சியிலும்
நிறையவில்லை
ஊன விழிகளால் காணத்தகும் இருள்.
உணர்ச்சி மிகுதலில்
காய்கள் வெள்ளையாயும் கருப்பாயும்
எதிரிலிருக்க சில்லு சில்லாய்
வெட்டி வீழ்த்தி நகர்கிறாள்
சதுரங்க விதிகளை
அடுத்தடுத்து உடைத்து.
கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.
 - தேனு 
நன்றி சொல்வனம்,

Friday, August 10, 2012

தனித்து விழும் ஒற்றை செம்பருத்தி


காற்றில் எழுதும் மொழியை
கற்கும் சேலைத் தலைப்பில்
பதிந்துபோன பாசத் துகள்களை
வெறித்தபடி திரிவாள் செம்பருத்தி..
எப்பொழுதாவது வந்துசெல்லும் மழையிடமும்
தனிமையின் விவாதங்களை
முன்வைக்கும் எண்ணமன்றி
தெறித்துவிழும் சாரல்களோடு
கூடிக்கூடி மௌனம் பேசுவாள்..
சென்ற மாதத்தின் நேற்றைய முன்தினம்
கிடத்தி வைத்திருந்த கணவனை
கண்ணீரிலும் அலறலிலும்
எழுப்பத் தெரியாதவளாய்தான்
கொல்லைப்புற மலர்களுக்கும் அவள் அறிமுகம்...
நடுக்கூடத்தின் சுவர்களில்
வழிந்துகொண்டிருந்த பால்யத்தை
எட்டிப் பிடிக்க தாவித்தாவிக் குதித்து
கீழ் விழுந்தவளைச் சுற்றி
எறும்புகள் இன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன...
நாளையோ மறுநாளோ
அவளாய் எழக்கூடும்...
இவ்வளவுக்கும்
அரவமின்றி அறைந்து கொண்டிருக்கின்றன,
பெயரற்ற
முற்றத்துப் பாதச்சுவடுகள்..
 - தேனு 
நன்றி கீற்று,

நீண்ட புதின கோப்பையின் மீளாத்துளிகள்

அதீத வண்ணத்தில் நிறைந்த முயல்குட்டி
என் மடியில் மீதிருந்த புதினத்தின்
முதல் பக்கத்தில் வந்தமர்கிறது...
பக்கங்கள் மோதும் விளிம்புகள்
ஒவ்வொன்றிலும் தனக்கான இரகசியங்கள்
நிறைந்திருப்பதாய் மெல்ல என்னிடம் சொல்கிறது..
எனையும் பக்கங்களுக்குள் உடனிழுத்து
புதினத்தினுலகில் இருவருமாய் துள்ளித்துள்ளி
பயணிக்கத் துவங்குகிறோம்..
முதலில் ஒரு மாளிகையினுள்ளே
போதிமரமும் திரிசூலமும்
போட்டியிட்டு சிலரை வதைப்பதைக் காண்கிறோம்..
அடுத்து வந்த பக்கங்களில் சங்கும் சக்கரமும்
நந்தவனத்து மலர்களை
நரம்புகளில் தொடுத்துக் கொண்டிருக்கின்றன..
மேலும் செல்கையில் வெள்ளிச்சிலுவை
சதைகளைச் சுமந்தபடி ஆணிகளை நோக்கிப்
பயணிப்பதைக் கண்டு ஓடுகிறேன்...
இப்படியாக இரத்தம்படிந்த எழுநூற்றி எண்பத்தியாறாம்
பக்கத்தின் விளிம்பில் நான்
தனியாக இவ்வுலகிற்கு மீண்டு வருகிறேன்..
நிதமும் புதினத்தைத்
திறந்துவைத்துக் காத்திருந்தும்
இப்பொழுதெல்லாம்
முயல்குட்டி வருவதேயில்லை...

 - தேனு 

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20405&Itemid=139

வதையின மொழி

மழையால் உருபெற்ற சாலையை
வண்ணச்சிறகுகளால்
அளந்து கொண்டிருக்கிறது சாம்பல் பறவை..
ஒவ்வொரு துளியையும்
அது தன் சிறகுகளின் தனித்த அறையில்
ரசனையுடன் சேமிக்க தவறுவதேயில்லை...
சிறகுகளின் நரம்புகளில் வேற்றுலகிற்குச்
செல்லும் வழியை இரகசியமாய்
காக்கிறது..
சிறகுகளைப் பிய்த்தெரியும்
விரல்களுடன் ஊர்ந்து வருகிறது
சர்ப்பமொன்று..
பறவையுடன் நட்பு கலந்து
உலகங்களுக்குள் வண்ணமாய் பயணிக்கவும்
கற்கிறது..
உச்சியில் சுவையேறிய
அடுத்த நிமிடம்
துடிதுடிக்க பறவையைச் சுவைக்கிறது..
இரத்தத்தில் நனைந்து சுகந்த சர்ப்பம்
மெள்ள மெள்ள
மற்றுமோர் உலகை நோக்கி
பயணித்தபடி
மனிதனாய் உருமாறத் துவங்கியிருக்கிறது...

 - தேனு 

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20312&Itemid=139

மௌனத்தின்கீழ் வீழும் மீளாச்சிறகுகள்


மின்கம்பி மட்டையின் மௌன அசைவுகளில்
மின்னித் தெறிக்கும்
பட் பட் ஒலிக்கீற்றுகள்...
**
இரவின் ஓர் ஓரத்தில்
ஒன்றாய் கூடிக்கொண்டிருந்தன
உயிரற்ற சிறகுகள்..

- தேனு

நன்றி உயிரோசை ,

இருமொழிப் பறவைகள் நிறைந்த அறை..


**

வெயில் துளிகளைப் பருகிக் கொண்டிருந்த
இரு பறவைகளை
கூண்டுடன் சிலாகிப்பவளுக்காக
வீட்டிற்கு அழைத்து வந்திருந்தேன்...
தன் சிறகுக் கதைகளை முழுதும்
கேட்டுக் கொண்டிருந்த கூண்டைவிற்று
பறவைகளுடன் மௌனங்களை
உச்சரிக்கத் துவங்கினாள்..
*
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியென
அறையெங்கும் மௌனங்களை மட்டுமே
பறவைகளுக்குப் பருகக் கொடுத்தாள்..
காற்றை புறக்கணிக்கும் குடுவைக்குள்
படுத்தவளைக் கண்ட
இரு பறவைகளும் காலத்தைக் கடந்து
சிறகடிக்கத் துவங்கின...
அவைகளுக்கான அவள் மௌன வனமெங்கும்
வண்ணமிசைச் சிறகுகளை நிரப்பி
ஒன்று ஒளிவண்ணத்திலும்
மற்றுமொன்று ஒலிவண்ணத்திலும்
சிறகடித்துப் பறந்திருந்தன...
**

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727

ஒரு சொல்லில் உறைந்திடும் நிமிடம்



அப்படியான ஒரு சொல்லில்
தனித்திருக்கிறேன்...

மிகத் துல்லியமான இழையில் தாழ பறக்கும்
ஓர் எழுத்துத்தும்பியின் 
மிச்ச உயிர்
கோர்வையென்னும் நொசிவிழை கயிறால்
பிணைக்கப்பட்டிருக்கிறது..

ஒவ்வோர் எழுத்துத்தும்பியின் பின்புறமும்
மெல்ல பறக்கும்
வெள்ளைச்சுவரின் மௌனத்துளிகளைக்
கொள்வதற்கான
இருப்பிலில்லை அறை..

கொள்ளாத் துளிகளின்
ஓர் எல்லையில் எழுத்தும்
மற்றுமோர் எல்லையில் மௌனமுமாய்
ஒரு நகைப்பிலோ,
ஒரு வரைதலிலோ,
ஒரு கோட்டோவியத்திலோ,
அடங்கா அர்த்தங்களால் ஆகிறது
சொல், ஒரு சொல்..

அப்படியான ஒரு சொல்
முழுதாய் வியாபித்திருக்கிறது
எனதிந்த இரவினை...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727

Saturday, June 30, 2012

துவங்கும் உரையாடல்களின் மையப்புள்ளி



உரையாடல்களின் மறதியில்
இழுபடுகின்றன புள்ளிகளற்ற கோடுகள்...

கோடுகளின் அழுத்தமான விவாதத்தில்
வார்த்தைகளைக் கோர்க்க
முழுதாய் மனமின்றி
புன்னகைக்கிறது வரைமௌனம்...

மௌனத்தின் அர்த்தங்களையும்
வார்த்தைகளின் அனர்த்தங்களையும்
மொழிபெயர்க்க மறந்து
பாதியாய் சிக்கலில் நிற்பதில்லை
கோலக்கோடுகளின் நீளங்கள்..

இரைந்திடும் வண்ணப்பிழைகளை
உறைநிமிடங்களில் இழைக்கிறது,
விடியலின் நொடித்துளிகளால்
வெளியிடப்படும் ஒற்றை மன்னிப்பு..

அடுத்து, எழுத்து மழை பெய்யத் துவங்குகிறது
கோலத்திற்குள் நெளியும் புள்ளிகளாய்...

- தேனு 

நன்றி உயிரோசை

Monday, June 25, 2012

உயிர்ப்பின் மீள்சிறகுகள்

வானவில்லின் வனத்திலிருந்து
சிறு சிறு வண்ணத்துளிகளைப் பறித்து

சிற்பம் தொடுத்துக் கொண்டிந்தவளிடம்
மீள்வருகை சாத்தியமா என்றேன்...
நட்சத்திரங்கள் சிரித்திருக்கும்
வண்ணக்கசிவின் உருவமற்ற சிற்பங்களில்
கனா தழும்பும் முத்தங்களால்
உயிர்க்காற்றை உட்புகுத்தத் துவங்கி இருந்தாள்
யாழினி..


- தேனு
நன்றி உயிரோசை

துளிர் நிமிடங்களின் இலை


திரையிட்டு மூடிய சாளரக்கம்பிகளைத்
தழுவிச் செல்கிறது
காற்றோடு பாயும் மௌனம்..
சாளரத்து மலர்க்கொடியின் கைகளில்
சிக்கிக்கொண்டு தவிக்கும்
ஒற்றை இலைச்சருகை 
இலகுவாய் காப்பாற்றத்
தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றன 
தொலைகாட்சி மின்கம்பிகள்...

- தேனு

நன்றி உயிரோசை,