Friday, August 10, 2012

தனித்து விழும் ஒற்றை செம்பருத்தி


காற்றில் எழுதும் மொழியை
கற்கும் சேலைத் தலைப்பில்
பதிந்துபோன பாசத் துகள்களை
வெறித்தபடி திரிவாள் செம்பருத்தி..
எப்பொழுதாவது வந்துசெல்லும் மழையிடமும்
தனிமையின் விவாதங்களை
முன்வைக்கும் எண்ணமன்றி
தெறித்துவிழும் சாரல்களோடு
கூடிக்கூடி மௌனம் பேசுவாள்..
சென்ற மாதத்தின் நேற்றைய முன்தினம்
கிடத்தி வைத்திருந்த கணவனை
கண்ணீரிலும் அலறலிலும்
எழுப்பத் தெரியாதவளாய்தான்
கொல்லைப்புற மலர்களுக்கும் அவள் அறிமுகம்...
நடுக்கூடத்தின் சுவர்களில்
வழிந்துகொண்டிருந்த பால்யத்தை
எட்டிப் பிடிக்க தாவித்தாவிக் குதித்து
கீழ் விழுந்தவளைச் சுற்றி
எறும்புகள் இன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன...
நாளையோ மறுநாளோ
அவளாய் எழக்கூடும்...
இவ்வளவுக்கும்
அரவமின்றி அறைந்து கொண்டிருக்கின்றன,
பெயரற்ற
முற்றத்துப் பாதச்சுவடுகள்..
 - தேனு 
நன்றி கீற்று,

No comments:

Post a Comment