Thursday, December 27, 2012

குளத்துப் பூனையும் காலப் பறவையும்





வெண்ணிலா இல்லாத ஓரிரவில்
என்னை வந்தடைகிறது சாம்பல் நிறப் பூனை...
காலங்களூடே பயணிக்கும்
மந்திரக் குளத்தைக் காண்பிக்கிறேன்,
என்னோடு வா என்கிறது..
வெகுநாட்களான பயணத்திற்குப் பிறகு
நானும் பூனையும்
வெண்ணிற குளத்தைக் கண்டறிகிறோம்..
ஒவ்வொரு நாளும் இரவில்
பூனை மட்டும் குளத்திற்குள் செல்கிறது.
மறுநாள் நிறம் மாறி
செந்நிறப் பறவையுடன் கழித்த காலங்களை
தன் ரோமங்களின் நிறங்களில் கதைக்கிறது.
எதிர்காலத்தின் நிகழ்வுகளைக்
காண்பிக்கும் பறவையைக் காணும்
நொடிகளை எதிர்பார்க்கத் துவங்குகிறேன்.
பூனை உறங்கிய நாளொன்றில்
பறவையைத் தேடி குளத்திற்குள் சென்று
காலச்சுழலில் சிக்கிக் கொள்கிறேன்...
வற்றிய குளத்தின் கரையில்
பெருத்த வயிறுடன் அமர்ந்திருக்கிறது
தன்னந்தனியாய்
சாம்பல் நிறப் பூனை...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6134

No comments:

Post a Comment