Monday, February 27, 2012

வார்த்தைகளின் கோர்வை விட்டுச் செல்லும் இணக்கம்






தனிமை நீளும் எனக்கான உலகில்
வார்த்தைகளின் இருப்பைக் கொண்டு என் பக்கம் வந்தமர்கிறாய்..
மௌனம் நிரம்பி வழியும் அறையின்
ஓர் மூலையில்
மெலிதான சலனத்துடன் பயணிக்கிறது
காற்றில் நிரம்பும் சொற்களின் எழுத்துப் படிமம்..

சாளரக் கம்பிகளின் நீளத்தில்
எழுதப்படவிருக்கும் வாக்கியச்சாரல்கள்
காத்திருப்பு வண்ணங்களைத் தீட்டி
உறவின் இணக்கம் பற்றிய குறிப்புகளை
சுவர்முழுதும் வரைகின்றன..

மெலிதாய் உரசிச் சென்ற தென்றல்
நெடுநாட்களுக்குப் பிறகான பார்வைகளை
உணர்வின் மைகொண்டு கண்களில்
நீர்கோர்த்துக் கொள்கிறது..

தனிமையின் உலகில்
இருப்பின் வர்ணனையை அணிந்திருக்கும்
வார்த்தைகளைக் கொண்டு என் பக்கம் வந்தமர்கிறாய்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5271

No comments:

Post a Comment